திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது கா. நமச்சிவாயர் பாடிய " இராமலிங்கர் துதி" :
அருள்பழுத்த செழுங்கனியே அகம்பழுத்த சிவஞான அமுதே முத்திப்
பொருள்பழுத்த அருட்பாவை எமக்களித்த தெய்வமணப் பூவே என்றும்
மருள்பழுத்த அடியேங்கள் மனவிருளை அகற்றவரு மணியே மெய்ம்மைத்
தெருள்பழுத்த வடலூர்வாழ் இராமலிங்க நின்னருளைச் சிந்திப் பேனே.
தேன்கலந்த திருவமுதாந் தேவராத் திருப்பாட்டைத் தினமு நாடி
"நான்கலந்து பாடுங்கால் நானறியேன் எனை" எனநீ நவின்ற பாட்டை
வான்கலந்த வடலூர்வாழ் இராமலிங்க மணியேயான் வழுத்துங் காலை
ஊன்கலந்த உயிரெல்லாம் உளமெல்லாம் உணர்வெல்லன் உருகு மாலோ.
வள்ளால்நின் வாசகத்தை வடித்த தமிழ்த் தேனெங்கோ வானோர்எய்த
அள்ளாத அமுதென்கோ அருளென்கோ அன்பென்கோ அறமே என்கோ
பொள்ளாத மணியென்கோ பொருளென்கோ பொன்னெங்கோ புலங்கள்நாடி
விள்ளாத வீடென்கோ இராமலிங்க மாமணியே விரிக்கொ ணாதே.
- கா. நமச்சிவாயர்
Nice poems
Friday, November 16, 2018 at 21:15 pm
by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Write a comment