கவிஞர். கங்கைமணிமாறன்
வள்ளலார் மிஷனுக்கு நன்றி
ஏப்ரல் 30..ஆம் தேதி
அமெரிக்காவின் வள்ளலார் மிஷன் ஏற்பாட்டில்
நிகழ்ந்த
அகில உலக நேரலையில்
இரண்டுமணி நேரம்
வள்ளலாரின் சமூகச் சீர்திருத்தங்களைப்
பற்றி 
முழங்கும் முத்தான வாய்ப்பை எளியேன் பெற்றேன்.
அது பற்றி இன்று தம் மேலான கருத்தை
சன்மார்க்க முன்னோடி..வள்ளல் பெருந்தொண்டர் அய்யா
ஈரோடு கதிர்வேல் அவர்கள் அலைப்பேசி வழி தெரிவித்தார்.
மனமார்ந்த வாழ்த்தையும்,
பாராட்டையும் இனிக்கும் சொற்களால் வெளிப்படுத்தி
உற்சாக உற்சவத்தை உள்ளத்தில் உண்டாக்கி மகிழ்வித்தார்.
வசிட்டர் திருவாயால்
பிரம்மரிஷி பட்டம் பெற்ற உணர்வு
உற்சாகத்தின் ஊடாடி நின்று
ஒளியூட்டியது.வண்ணமிகு
வாய்ப்பினை  வழங்கிய திரு. துரை அவர்கள்
என் நெஞ்சத் தடாகத்தில் என்றும் நீந்திக் கொண்டே இருப்பார் .
பட்டிதொட்டியெல்லாம் அருட்பிரகாசர் சன்மார்க்கக் கொள்கைகளைப் பந்தி வைத்து
ஜீவகாருண்யச் சிந்தனைகளைச் சிந்திவைத்து.. செந்தமிழ்
சுமந்து செம்மாந்து திரியும் எம் செயல் வேகத்தை மேலும் முடுக்கிவிட்டிருக்கிறது..அமெரிக்காவின் வள்ளலார் மிஷன்.
கற்பனை கடந்த ஜோதியைக் கைதொழுது அற்புதராம் நம் மெய்ஞானச் செல்வந்தர் மேன்மைத் திருநெறியில் பீடுநடை போடப் புதுரத்தம் பாய்ச்சிய ...அனைவருக்கும் நன்றி ...நன்றி.. .நன்றி!!!


Durai Sathanan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

எங்கள் நேயம்மிகுந்திட்ட அழைப்பை அன்புடன்ஏற்றுத்
தாங்கள் நேரலையில் ஆற்றியஅந்த அருட்பொழிவினை
அகிலம்தழுவிப் பாய்ந்த அமுதத்தமிழ்அலை என்பேனோ!
தமிழ்கூறும் நீடுலகிற்கு அறிவுப்பெருவிருந்து என்பேனோ!

இரண்டுமணிநேரம் முழங்கிய அழகிய தமிழ்மழையில்
வரண்டுபோய்க் கிடந்த உளங்களில் வள்ளல்அருளமுதம்
திரண்டுவந்து தேங்கியது! திகழ்ந்ததுநேரலை! ஒளியின்றி
இருண்டஉயிரக மொட்டும் மலர்வுற்று மணந்தரும்என்றும்!

வள்ளல் பெருந்தொண்டர்கள் வாழ்த்துச் சொல்லிட
வள்ளல் வழிவரும் எம்போல்வார் வளம்பலபெற்றிட
தங்கள் சுத்தசன்மார்க்க நற்பணிகள் உலகைவெல்ல
எங்கள் பிரார்த்தனைகள் இன்றுபோல் என்றும்முண்டு!

பட்டிதொட்டி எங்கெங்கும் நம்சீர்மிகும் சுத்தசன்மார்க்கப்
பட்டிமன்றத்து நடுவராய் இருந்து தமிழ்பேசும்மனங்களிலே
ஜீவகாருண்யச் சிந்தனைகளைச் செதுக்கிவரும் சிற்பியே!
ஜீவனுள்ள செந்தமிழே! பசிக்கவேகாத்துளோம் நின்பந்திக்கு!

சடங்குகளில் அடங்காத சுத்தசன்மார்க்கத்தை எங்களின்உள்ளக்
கிடங்குகளில் அடங்கும்படி ஆற்றும் ஐயாஉமதுசொற்பொழிவின்
கவிப்புலமும் கருத்துச்செறிவுமிகு ஒலிப்புலமும் என்றும்எங்கள்
செவிப்புலனைச் செழிக்கவைத்துச் சிந்தைக்குச் சிறகுதருமேவாழி!

வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...
Tuesday, May 9, 2017 at 15:36 pm by Durai Sathanan