அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன்
அடிக்கடி பொய்களே புனைந்தே
எடுத்தெடுத் துரைத்தேன் எனக்கெதிர் இலைஎன்
றிகழ்ந்தனன் அகங்கரித் திருந்தேன்
கொடுத்தவர் தமையே மிகவுப சரித்தேன்
கொடாதவர் தமைஇகழ்ந் துரைத்தேன்
நடுத்தய வறியேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
எளியவர் விளைத்த நிலமெலாங் கவரும்
எண்ணமே பெரிதுளேன் புன்செய்க்
களியுணும் மனையில் சர்க்கரை கலந்து
காய்ச்சுபால் கேட்டுண்ட கடையேன்
துளியவர்க் குதவேன் விருப்பிலான் போலச்
சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன்
நளிர்எனச் சுழன்றேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன்
கோடுறு குரங்கினிற் குதித்தே
அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம்
அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன்
மலைவுறு சமய வலைஅகப் பட்டே
மயங்கிய மதியினேன் நல்லோர்
நலையல எனவே திரிந்தனன் எனினும்
நம்பினேன் கைவிடேல் எனையே.
Write a comment