திருச்சிற்றம்பலம்
சுவாமிகளுக்குத் தெரிவிப்பது
சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன்மேலும் அதன்மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும், சாத்திரபேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய், சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது 26மாதத்திற்கு மேல். இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெருகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்.
பிரஜோற்பத்தி வருடம்
சித்திரை மாதம் 1ஆம் நாள்
* * *