Thiru Arutprakasa Vallalar- Tamil
11. சபை விளம்பரம் (25 - 1 - 1872)
 

திருச்சிற்றம்பலம்


உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே!
அறிவு வந்த கால முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும், அடைந்து அறியாத அற்புத குணங்களையும், கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும், செய்து அறியாத அற்புதச் செயல்களையும், கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும், அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும், இது தருணங் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்திய வுணர்ச்சியாற் பெருங்களிப்புடையேனாகி இருக்கின்றேன்.

நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லக்ஷியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.

இயற்கையிற்றானே விளங்குகின்றவரா யுள்ளவரென்றும், இயற்கையிற்றானே யுள்ளவராய் விளங்குகின்றவ ரென்றும், இரண்டுபடாத பூரண இன்பமானவ ரென்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சத்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும் மற்றெல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல், முதலிய பெருங்கருணைப் பெருந்தொழில்களை இயற்றுவிக்கின்றவ ரென்றும், எல்லாம்ஆனவ ரென்றும், ஒன்றும் அல்லாதவ ரென்றும், சர்வகாருணிய ரென்றும், சர்வவல்லப ரென்றும், எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்புயர்வில்லாத் தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே, அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்க ளெல்லாமாகி விளங்குகின்றார்.

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பல வேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பல வேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பல வேறு லக்ஷியங்களைக் கொண்டு, நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகின்றார்கள்.

இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல், உண்மையறிவு, உண்மையன்பு, உண்மையிரக்க முதலிய சுப குணங்களைப்பெற்று நற்செய்கை யுடையராய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று, பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து "இக்காலந் தொடங்கி அளவு குறிக்கப் படாத நெடுங்காலம், அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றாம்" என்னுந் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ் ஜோதியராய் வீற்றிருக்கின்றார்.

ஆகலின், அடியிற் குறித்த தருணந்* தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர்பெற்றெழுதல் மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள்.

சென்னப்பட்டணம்

இராஜதானியைச் சேர்ந்த இங்ஙனம்

கூடலூர் ஜில்லா மேற்படி சிதம்பரம்

தாலூகா வடலூர் இராமலிங்கப் பிள்ளை

அல்லது பார்வதிபுரம்

* அடியில் தருணம் எதுவும் குறிக்கப்பெறவில்லை. சபைத் தொடக்க நாளில் 25-1-1872ல் வெளியிட்டதெனக் கொள்வது பொருத்தம்.