மனிதர்களின் நோயணுகா வாழ்வுக்கு நல்ல சுவாசமே, தீர்வாகும். நல்ல சுவாசத்திற்கு, நுரையீரலின் செயல்பாடு இன்றியமையாததாகும். நுரையீரல் என்பது மனிதனின் சுவாசம் மூலம் வரும் காற்றிலிருந்து, ஆக்சிஜனை பிரித்து உடலில் பரவவைத்து, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும். சீராக இயங்கும் நுரையீரலே, இரத்தத்தை சுத்திகரித்து, மனித உடல் ஆயுளை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. அத்தகைய நுரையீரலில் நெடுநாட்களாக சளி தேங்கி, நுரையீரல் பாதிப்படைவதாலேயே, ஆஸ்துமா, இருமல் உள்ளிட்ட சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு, உடல் நலம் கெடுகின்றன. அத்தகைய பாதிப்புகளை நீக்கி, நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அகற்றி, சுவாசத்திற்கு உறுதுணை புரிந்து, நீண்ட ஆயுளை அடையவைக்கும் அற்புத மூலிகை, இந்த ஆடாதோடை மூலிகை.
"ஆடாத உடலும் ஆடும், பாடாத வாயும் பாடும்" எனும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, ஆடாதோடை மூலிகையை முறையாக, உண்டுவர, உடல் நலம் தேறி, மனதில் உற்சாகம் பிறக்கும்.