Anandha Barathi
சன்மார்க்க இசை வரலாறு: முன்னுரை - ஆனந்த பாரதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

சன்மார்க்க இசை வரலாறு: 

முன்னுரை:

விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே
தண்ணேதண் மதியேஅம் மதியில் பூத்த
தண்ணமுதே தண்ணமுத சார மேசொல்
பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின்
பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே. ...26 (மகாதேவ மாலை)

சன்மார்க்க இசை வரலாறு என்னும் தலைப்பை இன்னூலுக்கு இட்டு எழுத துவங்கும் போது, பல அன்பர்கள் இம்முயற்சியை அறிந்து பாராட்டி ஊக்குவித்தனர், அதோனோடு, சில அன்பர்கள் சன்மார்க்கத்திற்க்கும் இசைக்கும் தொடர்பு உண்டு என்பதே புதிய செய்தியாக உள்ளது என்றனர், ஆனால் இது உண்மையில் புதிய செய்தி அல்ல, 150 க்கும் மேற்ப்பட்ட ஆண்டுகளாக "இசைப் பயன்பாடு" என்பது சன்மார்க்கதில் நடைமுறையில் உள்ளது,

சன்மார்க்கம் என்பது தவநேயம், உயிர் நேயம், சிவ நேயம் ஆகிய மூன்றையும் அடிப்படியாக கொண்டது, சிவ நேயத்திற்க்கும், வழி பாட்டிற்க்கும் இசை இன்றியமையாத ஒரு கருவியாகும், காரைக்கால் அம்மையாரின் காலத்திற்க்கும் முன்பிருந்து, பண்ணும் இசையும் தமிழ் நாட்டில் இறைஉணர்வை வளர்க்க பயன்பட்டு வந்தது, அதோடு இறைவனே இசை வல்லான் என்றும் அவன் இசை வடிவாக உள்ளான் என்னும் கூற்று பண்டைய தமிழ் நூல்கள் முதல் அருட்பா வரையில் காணக்கிடைக்கின்றது, இசை என்பது மருள் நிறைந்த மனக்கருங்கல் பாறையையும் கரையச் செய்யும் ஒரு இரசவாதம் என்பதை உணர்ந்தோர் நன்கு அறிவார்கள், அந்த வகையில் சன்மார்க்க வழிபாட்டிலும், சங்கத்திலும் இசைப்பாடல்களின் பயன்பாடு பெருக இருந்ததை காண முடிகின்றது,

                                                                          பின்னெஞ்சாப்
பண்ணீர்மை கொண்டதமிழ்ப் பாமாலை யாற்றுதித்துக்
கண்ணீர்கொண் டுன்பாற் கனிந்ததிலை - தண்ணீர்போல் ...303
(அருட்பா/1 /விண்ணப்பக் கலிவெண்பா)

வள்ளல் பெருமானும் பெரும் இசை அறிஞாரக இருந்தார் என்பதையும், அவரின் மாணாக்கர்களில் ச.மு.கந்தசாமியார் முதலிய பலரும், சன்மார்க்க அன்பர்களும் இசை பாடும் வல்லமை கொண்டவர்களாக இருந்தனர் என்பதையும், அவர்கள் திருஅருட்பா மற்றும் சன்மார்க்கம் சார்ந்த பாடல்களுக்கு இசை முறையினை அமைத்து மரபுவழியாக பாடியுள்ளனர் என்பதயும், வள்ளல் பெருமானின் வரலாறு மற்றும் சன்மார்க்கம் சார்ந்த நூல்களின் மூலம் நன்கு காண முடிகிறது,

அதுமட்டும் அல்லாமல் நமது வள்ளலின் அருட்கொடையாகிய "திருஅருட்பா" இலக்கண இலக்கிய செழிப்போடு இசைச் செழிப்பும் கொண்டது என்பதை விளக்கும் விதமாக பெரிய இசை அறிஞர்களின் (எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலமுரளி கிருஸ்ணா மற்றும் பலர்...) இசை நிகழ்வில் மற்றைய இசைப் பாடல்களுக்கு இணையாக அருட்பாவும் பாடப்படுகின்றது, அதோடு இன்றைக்கு அருட்பாவுக்கு இசை சங்கங்கள் உள்ளன, முழு இசை விழாக்கள் நடைபெறுகின்றன என்பதே போதுமான சான்று ஆகும், அதோடு இசை அறிஞர்கள் பலரும் சன்மார்க்க அன்பர்களாகவே உள்ளனர் என்பது மேலும் சிறப்பு.

150 ஆண்டு கால சன்மார்க்க வளர்ச்சிக்கு இலக்கியமும், ஜீவகாருண்ய பணிகளும் எவ்வளவு பங்கு ஆற்றி உள்ளதே அதற்க்கு நிகரான பங்கினை இசையும் ஆற்றி உள்ளது என்பதே உண்மை,

இன்றைக்கு அருட்பா பாடல்கள் பண்ணிசை, கருநாடக இசை, திரைஇசை வடிவிலும், வில்லுபாட்டு, கும்மிபாட்டு, கோலாட்டம் முதலிய கிராமிய இசை வடிவிலும் இசைக்கப்பட்டு, சன்மார்க்க கருத்துக்கள் எளிய மக்களிடம் சென்று சேர்கின்றன என்பது எல்லோரும் அறிந்ததே, இசையால் சன்மார்க்கமும், சன்மார்க்கத்தால் இசையும் வளர்ந்தது, வளருகின்றது, என்பது மறைக்க இயலாத உண்மை ஆகும், ஆக இனியும் வளரும், வளர்க்கவும் வேண்டும்,

எனவே 150 ஆண்டுகால சன்மார்க்க இசைத் தொடர்பை முழுமையாக ஆறாய்ந்து பதிவு செய்து, அன்றைய இசை வழக்கத்தினை மீலவும் நினைவு கூறுவது பிற்காலத்தாற்கு சன்மார்க்கத்தின் விரிந்த தளத்தினை உணர்த்தவும், அந்த மரபை பின்பற்றவும், வழிபாடு செய்யவும், சன்மார்க்கத்தை பரப்பவும் உதவும் என்பதே இப்பணியின் நோக்கம்,

இப்பணியினை செய்யும் செய்யும் தகுதி, எனக்கு உண்டோ இல்லையோ அறியேன், ஆயினும் நமது வள்ளல் பெருமானின் திருவருளும், பெரியோர்களின் ஆசியும் இவ்வரும் பணியை நிறைவு செய்ய துணை செய்யும் என்னும் உறுதி பற்றி இப்பணியை மேற்கொள்கின்றேன்.
அன்பர்கள் படித்து அறிந்து பயன்பெருக!




                                                                                                              தொடரும்...
Isai .jpg

Isai .jpg

4 Comments
Daeiou  Daeiou.
மிக நல்ல பாராட்டுக்குரிய முயற்சி...இலங்கை போன்ற நாடுகளில், திரு அருட்பா பண்ணிசை மூலம் இசைக்கப்படுகின்றது. திருபுவனம் திரு ஆத்மநாதன் மற்றும் மழையூர் திரு சதாசிவம் போன்றோர்கள், திரு அருட்பா பண்ணிசை மூலம் பாடிய பாடல்கள், பல நபர்களை, சன்மார்க்க நெறிக்கு இழுத்து வந்தன என்றால் அது வள்ளற் பெருமானின் அருட் கருணை.. தொடரட்டும் இப்பணி...வாழ்த்துக்கள்.
Monday, August 1, 2016 at 14:49 pm by Daeiou Daeiou.
ஸ்வாமி  இராஜேந்திரன்
ஆனந்தம் இங்கு ஆரம்பம்!
Tuesday, August 2, 2016 at 02:25 am by ஸ்வாமி இராஜேந்திரன்
TMR RAMALINGAM
தங்கள் முன்னுரை இனிய இசையாக ஆரம்பமாகிவுள்ளது. திருவருட்பா, பிரபந்தத்திரட்டு போன்ற சன்மார்க்க பாடல்களில் உள்ள இசையின் நிறை குறைகளை ஆராய வள்ளற்பெருமான் இசைவும் தங்களுக்கு உண்டு. தொடரட்டும் உங்கள் சன்மார்க்கப் பணி. நன்றி ஐயா.
Tuesday, August 2, 2016 at 04:47 am by TMR RAMALINGAM
Anandha Barathi
Thanks to Thiru.Ramanujam ayya, Mr.TMR and Mr. swamy Rajendran ayya.
Tuesday, August 2, 2016 at 09:11 am by Anandha Barathi