www.vallalarspace.com/durai
சன்மார்கங்கள் - இரத்தினச் சுருக்கம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

சன்மார்க்கம் மூன்று வகைப்படும்.

அவைகள்,

1.சமய சன்மார்க்கம் : இது - முதற்படியாகிய சிற்சபை அனுபவம் என்றறிக. அதாவது, இஃது சத்துவகுண வாச்சியார்த்த அனுபவ முடிவாம்.

2. மத சன்மார்க்கம்: இது - இரண்டாம் படியாகிய பொற்சபை அனுபவம் என்றறிக. அதாவது , இஃது சத்துவகுண லட்சியார்த்த அனுபவ முடிவாம்.

3.சுத்த சன்மார்க்கம்: இது - மூன்றாம் படியாகிய சுத்த ஞானசபை அனுபவம் என்றறிக.

இங்கு, ‘சுத்தம்’ - என்பது ஒன்றும் அல்லாத ‘ நிர்மலம்’ - என்பதாம். மற்றும் , ‘சுத்தம்’ - என்பது, ‘சன்மார்க்கம்’- என்னும் சொல்லுக்கு முன்பு பூர்வமாக வந்ததால், ‘சுத்த சன்மார்க்கம்’ மேற்குறித்த சமயமத அனுபவங்களைக் கடந்தது என்று உண்மையாக அறிக.

ஆகையால் பாவனாதீத அதீதம், குணாதீத அதீதம், வாச்சியாதீத அதீதம், லட்சியாதீத அதீதம் மற்றும் அனைத்து அதிபக்குவாதீத அனுபவ முடிவுகளுக்கும் அதீதமாகியது ‘சுத்த சன்மார்க்கம்’ - என்பதால், நம் சுத்த சன்மார்க்கமே எவ்வகையிலும் உயர்வுடையது என்பதையும் அறிக.

எனவே, சுத்த சன்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி, இல்லாதன வல்ல என்றும் தெளிக! அதாவது, ஆன்மாவிற்கு அருள் எப்படி அநந்நியமோ, அதுபோல சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அநந்நியமே ஆகும். அதாவது, அவைகள் நமக்கு அந்நியம் அல்ல என்றும் தெளிந்திடுக.

ஆகையால், ‘சுத்தசிவம்’ – என்பது, “சிவம், பரசிவம் - இவ்விரண்டிற்கும் இடைப்பட்டது” - என்று பொருள் கொள்வது அறியாமையே. அஃது இவ்விரண்டிற்கும் அதீதம் என்று காண்பதுவே, சுத்த சிவ துரியாதீதச் சாக்கிரதாப் பேரருட் பெருநிலையின் மெய்யனுபவமாகும். அறிவோமாக!

எனவே, சுத்த சன்மார்க்கத்தை , ‘சன்மார்க்கம், சிவசன்மார்க்கம்’ - ஆகிய இவ்விரண்டிற்கும் இடைப்பட்டது என்று அறியாமையால் பொருள் கொள்ளாதீர்கள். ஏனெனில், இடைப்பட்ட நிலையில் உள்ள எந்த ஒன்றிற்கும் தனித்த வியாபகம் ஏற்படாமல், அது மற்றதில் வியாப்பியமாகிவிடும். அறிக உண்மையை!

ஆகவே, விந்து, பரவிந்து இவ்விரண்டையும் மறுக்கச் சுத்தவிந்து வந்தது போல, சிவம், பரசிவம் இவ்விரண்டையும் மறுப்பதே சுத்தசிவம் என்பதையும் நன்கு அறிந்து, சன்மார்க்கம், சிவசன்மார்க்கம் - இவ்விரண்டையும் மறுப்பதுவும், இவ்விரண்டிற்கும் அதீதத்தில் எக்காலத்தும் எவ்விடத்தும் வியாபகமாகத் தனித்துத் திகழ்வதும், சர்வ சித்திகளையும் பூரணமாகப் பெறவைப்பதுமாகிய சாத்தியச் சத்திய மார்க்கமே, நம்முடைய சுத்த சன்மார்க்கம் என்பதையும் சத்தியமாக அறிந்து, அதன் உண்மைச் சாத்தியானுபம் பெற்றிட, விரைந்து முயன்றிடுவோமாக.

அந்தத் தீவிர முயற்சியானது, சுத்த சத்தொழுக்கத்தாலும் மற்றும் சத்துவிசாரத்தாலும் மட்டுமே இருக்கவேண்டுமேயன்றி, வேறொன்றாலும் கூடாது என்றும் அறிக. ஏனெனில், மற்ற சாதனங்கள் எல்லாம் வெற்று மாயாசாலங்களே! இதைத் தீர்க்கமாகத் தெரிந்து தேர்ந்திடத் திருவருள் துணைபுரியுமாக!

மேற்கண்ட விபரங்கள் யாவும் திருஅருட்பா உரைநடைப்பகுதியில் சன்மார்க்கங்களைப் பற்றிய உபதேசக்குறிப்புப் பக்கங்கள் (401 -411) இவற்றிலிருந்து சுருக்கித் தரப்பட்டதே யல்லாமல் எனது தனிப்பட்ட விளக்கம் அல்ல என்பதை அன்பர்கள் உண்மையாக அறியவும்.

நன்றி! வணக்கம்! வளமோடு வாழ்க!!

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

எல்லாஉயிர்களும்இன்புற்றுவாழ்க!
வள்ளல்மலரடிவாழ்க! வாழ்கவே!
திருச்சிற்றம்பலம்

 

Damodaran Raman
வள்ளலார் ஸ்பேஸ் கவனத்திற்கு. இங்கு நான் செய்த கமென்ட் ஏற்றுக் கொள்ளாமல் நீக்கப்பட்டுள்ளது. நான் வள்ளலார் பாடல்களின் அடிப்படையில்தான் கேள்வி எழுப்பினேன். இது சத்விசாரத்தில் அடங்குவதுதான். உங்களால் வள்ளலார் பாடல்களைக் கூட ஏற்றுக்கொள்ள மனமில்லையா? சாகாக்கலவியைப் பற்றிக கேட்பதே இவ்வுலக வேடிக்கை யென்று எப்போதும் வாடிக்கையாகக் கூறும் துரையவர்களின் வள்ளலாருக்கு மாறான-எதிரான பதிவுகள் இடம் பெறுவது எதற்காக என்று விளக்குவீர்களா? வேறு என்ன கூறுவது? வள்ளலார் கூற்றுகளுக்கும் கொள்கைகளுக்கும் இந்த வலைதளத்தில் இடமில்லையா? வள்ளலார் சொன்னதை ஏறக மாட்டோம். துரையவர்களின் வள்ளலாருக்கு மாறான கருத்துகளைத்தான் ஏற்போம் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் தாராளமாக அதிலேயே நீங்கள் உறுதியாக இருங்கள். ஏற்கனவே நான் செய்த பதிவுகளையும் நீக்கி விடுமாறு வேண்டுகிறேன்.அன்று அளித்த ஆதரவிற்கு மிகவும் நன்றி.வணக்கம். வாழ்க.
Friday, December 11, 2015 at 12:08 pm by Damodaran Raman