கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
Write a comment